Saturday, August 17, 2013

அமெரிக்க தமிழரின் மேஜிக் பாக்ஸ்!

உலக மக்களில், லட்சக்கணக்கானோர் இன்னும் மின்சாரம் இல்லாமல் அடர்ந்த காடுகளிலும், குக்கிராமங்களிலும் இருளில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். ஆப்ரிக்கா மற்றும் தெற்கு ஆசியா நாடுகளில் வசிக்கும் இப்படிப்பட்ட மக்களுக்கு, அங்குள்ள ஏழை நாடுகளால், மின் வசதி செய்து கொடுக்க முடியவில்லை.
இவர்களின் கஷ்டங்களை போக்கும் வகையில், அவரவர்களுக்கு தேவையான மின்சாரத்தை, அவர்களே உற்பத்தி செய்து கொள்ளும் வகையில், ஒரு மாற்று மின்சக்தியை கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளார் அமெரிக்க வாழ் தமிழர் ஒருவர். அமெரிக்காவில் வசிக்கும் தமிழகத்தை சேர்ந்த ஸ்ரீதர் தான், இச் சாதனைக்கு சொந்தக்காரர்.
 
இன்றைய தேதியில் அமெரிக்கா முழுவதும் வியப்போடு கவனிக்கப் பட்டு வரும் நபர் கே.ஆர்.ஸ்ரீதர். இவர், அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான, "நாசா'வில் பணியாற்றிய போது, செவ்வாய் கிரகத்தில் மனிதன் வாழ்வதற்கான சூழ்நிலை, மற்றும் மனிதன் சுவாசிக்க தேவையான, ஆக்சிஜனை அங்கேயே உற்பத்தி செய்ய முடியுமா என்பதற்கான ஆராய்ச்சியை மேற்கொண்டார். அதில், வெற்றியும் பெற்றார். ஆனால், துரதிருஷ்டவசமாக அமெரிக்க அரசு, இந்த ஆய்வை கைவிட்டது. இருந்தாலும், தான் கஷ்டப்பட்டு கண்டுபிடித்த ஒரு விஷயத்தை, அவர் அப்படியே விட்டுவிட தயாராக இல்லை. 

அந்த ஆய்வை, அப்படியே ரிவர்சில் செய்து பார்த்தார். ஏதோ ஒன்றிலிருந்து, ஆக்சிஜனை உருவாக்கி வெளியே எடுப்பதற்கு பதிலாக, அதையே, ஒரு இயந்திரத்தினுள் அனுப்பி, அதோடு, இயற்கையாக கிடைக்கும் எரிசக்தியை சேர்த்தால், என்ன விளைவுகள் ஏற்படும் என, ஆய்வு செய்து பார்த்தார். அட... என்ன ஆச்சரியம். மின்சாரம் தயாராகி வெளியே வந்தது. 

தான் கண்டுபிடித்த தொழில் நுட்பத்தை பயன்படுத்தி, வர்த்தக ரீதியில் மின்சாரம் தயாரிக்க வேண்டு மெனில், அதற்கான இயந்திரங் களை உருவாக்க வேண்டும். இதற்கு, பெரிய அளவில் பணம் வேண்டும். முதலீடு செய்ய ஆள் வேண்டுமே! ஸ்ரீதருக்கு அப்படி ஒருவர் கிடைத்தார். அவர் தான், வெஞ்சர் கேப்பிடல் நிறுவனர் ஜான் டூயர். 

துவக்கத்தில் இவர் போட்ட முதலீடு, 10 கோடி ரூபாய். இது, மிகப் பெரிய தொகை என்றாலும், ஸ்ரீதரின் தொழில் நுட்பத்தின் மீதிருந்த நம்பிக்கை காரணமாக, துணிந்து முதலீடு செய்தார். சுற்றுச் சூழலுக்கு, எந்த வகையிலும் பங்கம் வராத இந்த மின் உற்பத்தி திட்டத்திற்கு, பெரும் வரவேற்பு இருக்கும் என்று நம்பினார். அவரது நம்பிக்கை, பொய்க்கவில்லை.
 
அலாய் மெட்டலுடன் விலை உயர்ந்த பிளாட்டினம் கலந்து, 12 அடி உயரமுள்ள இரும்பு பெட்டி தான், ஸ்ரீதர் உருவாக்கியுள்ள இயந்திரம். மிகப் பெரிய நிறுவனங்கள் தவிர, வேறு யாரும் வாங்க முடியாத அளவில் கோடிகளில் உள்ளது இதன் விலை. கட்டடங்களிலும், வெட்ட வெளியிலும் கூட, வைத்துக் கொள்ளும் வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளது. தற்சமயம் 20 பன்னாட்டு நிறுவனங்கள், ஸ்ரீதரின் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, மின்சாரம் தயார் செய்து வருகின்றன. 

கூகுள் 400 கி.வாட், வால்மார்ட் 400 கி.வாட், இ.பே 500கி.வாட் மற்றும் இவர்களுடன் பெடக்ஸ், ஸ்டேபிள் போன்ற நிறுவனங்களும், பெரும் அளவில் முதலீடு செய்துள்ளன. இந்த தொழில்நுட்ப இயந்திரம், இரண்டு லட்சம் ரூபாயில் உலகம் முழுவதும் கிடைக்கும் பட்சத்தில், உலக மக்கள் ஸ்ரீதரின் பெயரை உச்சரிப்பர் என்பதில் சந்தேகமில்லை.

புளும் பாக்ஸ் என்றால் என்ன?
 
"புளும் பாக்ஸ்' என அழைக்கப்படும், இந்த மேஜிக் பாக்சில் வைக்கப் பட்டிருக்கும், "பியுயல் செல்' மூலம், ஒரு பெரிய தொழிற்சாலைக்கு தேவை யான, மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும்.
 
"பியுயல் செல்' என்பது, செராமிக் மின்சாரத்தை தாங்கக்கூடிய புரோட்டான் கள் மற்றும் அதைச் சுற்றி கவசமாக செயல்படும் மெம்பரானெஸ்களால் உருவானது. சோலார் எனர்ஜியை விட, ஆறு மடங்கு ஆற்றலுடன் செயல்படும், "புளூம் பாக்ஸ்' சுற்றுச் சூழலை மாசுபடுத்தாத, சுற்றுச் சூழலுக்கும், மக்கள் வாழ்வாதாரத்திற்கும் ஏற்ற, எனர்ஜி என்பது தான் இதிலுள்ள விசேஷம்.
 
உலகம் வியக்கும், இந்த அரிய கண்டுபிடிப்பை உருவாக்கிய, "புளூம் எனர்ஜி'யின் முதன்மை செயல் அதிகாரி ஸ்ரீதர் கூறியதாவது:
 
"புளூம் பாக்சி'னுள் இருக்கும் தட்டையான டிஸ்க், மின்சாரத்திற்கு தேவையான எனர்ஜியை உற்பத்தி செய்கிறது. இதற்கான சீக்ரட் பார்முலா, வெறும் கடற்கரை மணலும், இரு வகை இங்க் மட்டுமே! இதில், தயாராகும் மின்சாரத்தை சேமிக்க, டிரான்ஸ்பார்ம்களோ, கொண்டு செல்ல மின் கடத்திகளோ, மின் கம்பங்களோ எதுவும் தேவையில்லை. 

இன்னும் சொல்லப்போனால், ஒயர்லெஸ் ரவுட்டர் மூலம் செயல்படும் இந்த மேஜிக் பெட்டி மூலம், எலக்ட்ரிக் லைனுக்கே, "குட்பை' சொல்லி விடலாம். இதனுள் இருக்கிற ஆக்சிஜனும், இயற்கை எரிவாயுவும் சேர்ந்து, 24 மணி நேரமும் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும்.
 
தற்சமயம், இந்த இயந்திரத்தின் விலை கோடிக்கணக்கில் உள்ளதால், மிகப் பெரிய நிறுவனங்கள் மட்டுமே வாங்க முடியும். இன்னும் சில ஆண்டுகளில், 1 லட்சத்து 80 ஆயிரம் ரூபாயில் சிறிய, "புளூம் பாக்சை' விற்பனைக்கு கொண்டு வர முடியும். அப்படி, குறைந்த விலை பாக்சின் மூலம், இந்தியாவில் ஆறு வீட்டுக்கு தேவையான மின்சாரத்தை, ஒரு பாக்ஸ் மூலம் உற்பத்தி செய்ய முடியும் என்கிறார் ஸ்ரீதர்.

யார் இந்த ஸ்ரீதர்!

தமிழகத்தை சேர்ந்த ஸ்ரீதர், திருச்சி ரீஜினல் இன்ஜினியரிங் கல்லூரியில், மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்து முடித்து, அதன் தொடர்ச்சியாக அமெரிக்காவில் உள்ள இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில், நியூக்ளியர் இன்ஜினியரிங் பயின்றார். பின், அதே கல்லூரியில் ஆராய்ச்சி படிப்பை முடித்து, டாக்டர் பட்டமும் பெற்றார். அதிபுத்திசாலியான இவர், அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான, "நாசா'வில் பணியில் சேர்ந்து, செவ்வாய் கிரக ஆராய்ச்சியில் ஈடுபட்டவர்.

தகவல்; தினமலர்